ஒலிம்பிக்கில் முதல் தங்கம் : துப்பாக்கிச்சுடுதலில் பெற்றார் சீன வீராங்கணை
- Saturday, 28 July 2012 14:51

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கம் சீன வீராங்கணை யி சில்லிங்கிற்கு கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்கின் இன்றைய இரண்டாவது நாள் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டியில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இறுதி போட்டிக்கு போலந்து, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, செக் குடியரசு நாட்டு வீராங்கணைகள் தகுதி பெற்றனர். இவர்களில் மொத்தம் 502.9 புள்ளிகளை பெற்று சீனாவின் யி சில்லிங் தங்கப்பதக்கத்தையும், போலந்து வீராங்கணை சில்வியா வெள்ளிப்பதக்கத்தையும் சீன வீராங்கணை யூ டான் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் சீனா வென்றுள்ள முதல் தங்கம் இதுவென்பதுடன், இம்முறை ஒலிம்பிக்கில் பெறப்பட்ட முதல் தங்கமும் இது தான். கடந்த முறை அதிக பதக்கங்கள் பெற்று சீனா முதலிடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் படி 8 தங்கப்பதக்கங்கள் பெறப்பட்டுள்ளன. ஜாவால-டிஜு இந்திய ஜோடி கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். இந்திய ஆடவர் வில்வித்தை குழு அணியும் ஜப்பானுடன் தோற்று தோல்வி அடைந்துள்ளது.
ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகளில், இந்தியாவின் காஷியப் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கணை அங்கிதா தாஸ் 1-4 என ரமிரேஷிடம் முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
